அம்மா.......
என் முதல் அழுகையை பார்த்து
நீ சிரித்தாய்
என்பதற்காக என்னவோ
இன்னும்
அழுது கொண்டிருக்கிறாய்
எனக்காக !
சூரியன்
என் முகம் சுடுமோ என்று
உன் சேலையில்
என் முகம் மூடினாய் . . .
எனக்காக
நடந்து நடந்தே
வறண்டு போன
உன் பாதங்களுக்கு
ஈரம் கொடுக்கிறது
என் கண்ணீர் . . .
இன்னும் நான் சாப்பிடுவேன் என்று
எதிர்பார்த்து எதிர்பார்த்தே
பழையதாகி போன சோறு
உன் தட்டில் ...
அன்றும் எனக்காக கொதித்து
கொண்டிருந்தது கறிக்குழம்பு
அடுத்த வேளைக்கு !. . .
உன் கிழிந்து போன
ஆடையை கூட
கணக்கில் கொள்ளாமல்
என் அலமாரியில்
ஆடைக் கணக்கை
கூட்டினாய். . . .
எத்தனை கஷ்டம்
அத்தனையும் சுமந்து கொண்டு
அழகு சிரிப்பு
சிரித்தாய் எனக்காக !
அம்மா !
அழ நினைக்கிறேன்
எங்கே தாலாட்டும் உன் மடி . . .
எத்தனை பிறவிகள்
வேண்டும் . .
நான் அத்தனையும்
திருப்பி செய்ய . ..
உன் ஜாக்கெட் கிழிசலை விட
என் பாக்கெட் கிழிசல்
உனக்கு எப்படி பெரியதாய் தெரிந்தது . . .?
தூக்கத்தை தொலைத்தாய்
துக்கத்தை மறைத்தாய்
ஏன்?
நான் சிரிக்க வேண்டுமா ?
அம்மா !
என்னிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் ?
உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய
என்னால் எப்படி முடியும் . . .?
எனக்கென்னவோ சிறிய காய்ச்சல் தான்
உனக்கேன் இப்படி நடுக்கம் . . .
உச்சி வெய்யிலில்
குச்சியாய் போனது உன் தேகம்
ஆனாலும்
ஆலை சங்கொலி கேட்டதும்
அன்பு மகன்
விழித்திருப்பான் என்று
அறை குறை வேலை முடிப்போடு
என் அறை நோக்கி
ஓடி வருவாய் . . . !
காசு போட முடியாமிலிருந்தும்
கடன் வாங்கி உன் மகனுக்கு
ஜீன்ஸ் போட்டு
அழகு பார்த்தாய் . . .
உனக்கென
நான் எழுதியதும்
என் விரல்கள் உதறியதை விட
என் விழிகள் உதறியதே அதிகம் . . .
கண்ணீர் மல்க கேட்கிறேன்
அம்மா . .!
என் ஆயுளில் பாதி எடுத்து
உன் ஆயுளோடு சேர்த்து
எனக்காக என்னோடு வாழ்வாயா?
உன்னைத் தவிர
யாரிடம் தேடுவேன்
இந்த பாசத்தை . . .
. . . .அன்பு மகன் . . .
No comments:
Post a Comment